google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: Song of a Palm Tree
Showing posts with label Song of a Palm Tree. Show all posts
Showing posts with label Song of a Palm Tree. Show all posts

Saturday, 3 September 2016

Song of a Palm Tree

பனை பாடும் பாட்டு

சோபனமடி சோபனமே சிவசோபனம் தமிழ்பாட
அச்சோடி பெண்களா சோபனமே அம்மாடி பெண்களா சோபனமே!


பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே! சொல்கிறேன் கேட்பீர்.
அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே!
தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே!
பராமரியா யிருக்காமல்  பட்சமுடன் கேட்டிருங்கள்.
படுக்கப்பாய் நானாவேன், பாய்முடையத் தோப்பாவேன்,
வெட்டநல்ல விறகாவேன், வீடுகட்ட வாரையாவேன்,
பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்தநல்ல ஏற்றமாவேன்,
அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்,
கட்டநல்ல கயிறாவேன், கன்றுகட்டத் தும்பாவேன்,
மட்டமுள்ள உறியாவேன், மாடுகட்டத் தும்பாவேன்,
பசுவணைக்குங் கயிறாவேன்பால்தயிருக்கு உறியாவேன்,
வாரமட்டை நானாவேன், வலிச்சல்களுந் தானாவேன்,
தொட்டிலுக்குக் கயிறாவேன், துள்ளியாட ஊஞ்சலாவேன்,
கிணத்துசலம்  மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்,
பலத்தசுமை பாண்டங்கட்குப் புரிமணையுந் தானாவேன்,
ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்,
மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்,
பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்,
விர்த்தாப்பியப் பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி  நானாவேன்,
குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்,
பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்குடை நானாவேன்,
திருப்புக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்,
திருப்பாவை சேவிப்போர்க்குத் திருத்துழாய்ப் பெட்டியாவேன்,
எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்,
ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத்  தடுக்காவேன்,
நனைந்து வருவார்க்கு டம்பக்குடை நானாவேன்,
பசித்து வருவார்க்குப் பனம்பழமும்  நானாவேன்,
பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்,
சித்திரைக் கோடையிலே சிறந்தநல்ல நுங்காவேன்,
காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்,
கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்புக்கட்டி நான்தருவேன்,
வேலிகட்டக் கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்,
வருடத்துக் கோர்தினத்தில் சரசுவதி பூசைசெய்து
ஆமெழுகிக் கோலமிட்டு  அச்சோடி பெண்களா சோபனமே!
மணையலம்பிக் கோலமிட்டு மணைநிறைய புராணம்வைத்து
பூவும் புதுமலரும் பொன்னாகும் அட்சதையும்
அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெல்லாம்,
வித்தாரமாய் இரண்டாநாள் விசயதசமி என்றுசொல்லி,
நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு,
எண்ணெய் தேய்த்து நீராட்டி இயல்புடனே அலங்கரித்து,
மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
வெள்ளிநெட் டெழுத்தாணி வேடிக்கை யாய்ப்பிடித்து,
ஆரியரும் வேதியரும் அரிநமோ வென்றெழுதி,
அரிஅரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்,
அரிச்சுவடி என்னாலே, அடுக்காய்ப் பாடம் என்னாலே,
எண்சுவடி என்னாலே, குழிமாற்றும் என்னாலே,
தர்க்கங்கள் என்னாலே, சாத்திரங்கள் என்னாலே,
இராமாயணம் என்னாலே, பாரதமும் என்னாலே,
பாகவதம் என்னாலே, பல்சாத்திரங்கள் என்னாலே,
திருவாய்மொழி என்னாலே, திவ்வியப்பிரபந்தம் என்னாலே,
நாலுவேதம் என்னாலே, ஆறுசாத்திரம் என்னாலே,
கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகப் பெற்றிருப்பேன்,
மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே,
வர்த்தகரும் செட்டிகளும் வழியறிவதும் என்னாலே,
கணக்கர்களும் முதலிகளும் கணக்கறிவதும் என்னாலே,
பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்,
காசுக்கடை சவுளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்,
கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச் சொல்லி வாங்கி வைப்பேன்,
கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்த பிள்ளைகட்குத்
திருத்தமுள்ள மாபலியாய்த் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்,
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்,
காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்,
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்,
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்,
சீமந்த வாசலுக்குச் சீருடனே நான்போவேன்,
பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்,
மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்,
அரண்மனையில் நானிருப்பேன், ஆஸ்தானத்தில் நானிருப்பேன்,
மச்சுள்ளே  நானிருப்பேன்மாளிகையில் நானிருப்பேன்,
குச்சுள்ளே நானிருப்பேன், குடிசைக்குள் நானிருப்பேன்,
எருமுட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்,
ஏரிக்கரை மேலேநான் எந்நாளும் வீற்றிருப்பேன்,
எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்,
சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்,
சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்,
இத்தனைக்கும் உதவியென்று என்னைஅயன் சிருட்டித்தான்,
கற்பக விருட்சமெனக்கு எல்லையுந்தான் மறந்தேன்,
திருப்பாளை ஊர்தன்னிற் சிவன்புனைந்தான் என்நாமம்,
நான்வளர்ந்த சேதிதனை நலமுடனே கேட்டவரும்,
பாடிப் படித்தவரும் பட்சமுடன் கேட்டவரும்,
சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்,
எல்லை உலகளந்த எம்பெருமான் கோத்திரம்போல்,
ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல்வாழ்வார்,
ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் ஈஸ்வரனும்.